மாநகர சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு

மாநகர சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு: பாதாளக் குழுவினரின் கைவரிசை என தெரிவிப்பு

by Bella Dalima 25-05-2018 | 3:41 PM
Colombo (News 1st) தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பாதாளக் குழுவினரால் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது. அஞ்சு என அழைக்கப்படும் பாதாளக்குழுத் தலைவரின் குழுவினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். வௌ்ளை நிறத்திலான காரொன்றில் வந்த அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரத்மலானை - ஞானேந்திர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தெஹிவளை- கல்கிசை மாநகர சபை உறுப்பினர் கே. ரஞ்சன் சில்வா உயிரிழந்தார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தையே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர்களில் தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஊழியர் ஒருவரும், மீனவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கரையோர ரயில் மார்க்கத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.