அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: வடகொரியா அறிவிப்பு

by Bella Dalima 25-05-2018 | 5:17 PM
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடனான பேச்சுவார்த்தையை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்ததாகவும், அண்மையில் வெளியான அவரின் அறிவிப்பில் பகைமை வெளிப்பட்டதால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது உகந்த நேரம் அல்ல என தீர்மானித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், வடகொரியாவால் நீண்டகாலம் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் 3 பேரை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வடகொரியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிம் கை குவான் கூறுகையில், வடகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரத்து செய்தமை மிகவும் வருத்தமளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்