சக்தி சிரச நிவாரண யாத்திரை நாளை காலை ஆரம்பம்

சக்தி சிரச நிவாரண யாத்திரை நாளை காலை ஆரம்பம்

by Bella Dalima 23-05-2018 | 8:46 PM
Colombo (News 1st)  தொடரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சக்தி சிரச நிவாரண யாத்திரை மூலம் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிவாரண யாத்திரைக்கு மக்கள் பெருந்திரளாக வந்து நிவாரணப் பொருட்களை கையளித்தவண்ணமுள்ளனர். இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றிய நிவாரண யாத்திரை நாளை காலை ஆரம்பமாகவுள்ளது. சக்தி சிரச நிவாரண யாத்திரைக்காக கடந்த 21 ஆம் திகதியில் இருந்து நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிவாரணப் பொருட்கள் மூன்று இடங்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு - 2 இல் அமைந்துள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. இதேவேளை, இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகத்திலும் தெபானம கலையக வளாகத்திலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்களை சேகரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, பருப்பு, சீனி, நூடுல்ஸ், டின் மீன், பிஸ்கட், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார/ மருத்துவப் பொருட்களை கையளிக்க முடியும். மேலதிக தகவல்களுக்கு 077 2990542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.