கேகாலை மாவட்டத்தில் 3 கல்வி வலயங்களுக்கு விடுமுறை

சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 3 கல்வி வலயங்களுக்கு இன்றும் விடுமுறை

by Staff Writer 22-05-2018 | 9:50 AM
COLOMBO (News 1st) சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி வலயங்களுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். நிதி ஒதுக்கீட்டை பிரச்சினையாக முன்னிறுத்தாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிவாரணங்களையும் கவனத்திற் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு இலங்கை இராணுவத்தினர் உதவியை நாடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான நலன்புரி உதவிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.