ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

by Bella Dalima 19-05-2018 | 6:03 PM
பேனர் வைக்கும் தகராறில் வெட்டிக்கொல்லப்பட்ட தனது ரசிகருக்காக நடிகர் சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார். தேனாம்பேட்டையில் ஒரு குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மதன். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாடகராக (டி.ஜே) பணியாற்றி வந்தார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான மதன், சிம்பு ரசிகர் மன்றத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த வாரம் ஒரு திருமணத்திற்கு பேனர் வைக்கும்போது, அந்த பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கும் மதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் மதன் வெட்டிக்கொல்லப்பட்டார். மதன் கொல்லப்பட்ட செய்தி துபாயில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் இருந்த சிம்புவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தனது தந்தை டி.ராஜேந்தரை அனுப்பி மதன் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூற வைத்தார். நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய சிம்பு, நேற்று இரவு தனது ரசிகனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேனாம்பேட்டை பகுதியில் ஒட்டினார். சிம்பு போஸ்டர் ஒட்டும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.