நஜீப்பின் வீட்டிலிருந்து பணம், நகைகள் பறிமுதல்

நஜீப் ரசாக்கின் வீட்டிலிருந்து பணம், நகைகள் பறிமுதல்: 28 மில்லியன் இலங்கை ரூபா அடங்குவதாக தகவல்

by Bella Dalima 18-05-2018 | 5:52 PM
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல இலட்சம் பெறுமதியான பணமும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பண மோசடி வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் பொலிசார் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தில் 28 மில்லியன் இலங்கை ரூபாவும் அடங்குவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது எனவும் மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பைக் கண்டறிய வேண்டும் எனவும் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை உயர் அதிகாரி அமர் சிங் தெரிவித்துள்ளார். நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.