எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்

எடியூரப்பாவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கால அவகாசம்

by Bella Dalima 18-05-2018 | 7:41 PM
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பே இதற்கான தீர்வு என குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆளுநர் வாஜுபாய் வாலா 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா முக்கிய கொள்கை முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க உரிமை கோரியதை, ஆளுநர் ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.