நாணய சுழற்சியின்றி டெஸ்ட்போட்டிகளை நடத்த முடியுமா?

நாணய சுழற்சியின்றி டெஸ்ட் போட்டிகளை நடத்த முடியுமா: ICC பரிசீலனை

by Bella Dalima 17-05-2018 | 8:53 PM
Colombo (News 1st)  நாணய சுழற்சியின்றி டெஸ்ட் போட்டிகளை நடத்த முடியுமா என்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை கவனம் செலுத்தியுள்ளது. போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தின் தன்மையை அமைத்து நாணய சுழற்சியின் மூலம் அதன் பலனைப் பெறுவதனை தவிர்ப்பதற்காக இந்த புதிய திட்டத்தை ICC பரிசீலிக்கவுள்ளது. 1887 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் MCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் நாட்டு அணியின் தலைவர் நாணயத்தை சுழற்ற எதிரணித் தலைவர் பூவா, தலையா என்பதனைக் கோரும் முறைமை அறிமுகமானது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெரும்பாலும் நாணய சுழற்சியின்றி ஒரு போட்டியேனும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, போட்டிக்காக விஜயம் செய்யும் வெளிநாட்டு அணியின் தலைவருக்கு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதா அல்லது களத்தடுப்பில் ஈடுபடுவதா என்பதனை தீர்மானிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும். எவ்வாறாயினும், இந்த புதிய திட்டம் தற்போதைக்கு டெஸ்ட் போட்டிக்காக மாத்திரமே பரிசீலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக மும்பையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சரவதேச கிரிக்கெட் பேரவையின் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. 15 பேர் கொண்ட அந்தக் குழுவில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, போட்டி மத்தியஸ்தர்களான ரஞ்சன் மடுகல்ல, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.​