தனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்

தனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்

by Bella Dalima 17-05-2018 | 6:44 PM
‘காலா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், தயாரிப்பாளர் தனுஷ் மீது கோபமடைந்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 7 ஆம் திகதி வெளிவரவிருக்கும் காலா படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். இன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்திற்கான விளம்பர வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆம் திகதி சென்னையில் 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. ஆந்திர ரஜினி ரசிகர்கள் என்ற சமூக வலைத்தளத்தில் நேற்று (16) பகிரப்பட்ட ஒரு செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செய்தியில்
நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இன்னும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் சின்ன விளம்பரம் கூட இல்லை. தெலுங்கில் படம் இன்னும் விநியோகமும் ஆகவில்லை. தயாரிப்பு தரப்பின் மோசமான திட்டமிடல் இது. காலா படத்தின் பாடல்களும் ஆந்திர மக்களை இன்னும் வந்து சேரவில்லை
என்று பகிரங்கமாக ட்விட்டரில் எழுதி அதில் தனுஷ், தனுஷின் தயாரிப்பு நிறுவனம், லைக்கா, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரையும் இணைத்திருக்கிறார்கள். இதேபோல், மும்பை ரஜினி ரசிகர் மன்றத்தினரும் இந்தி காலா படத்திற்கான விளம்பர வேலைகளை ஏன் இன்னும் தொடங்கவில்லை? என்று தனுசை கேட்டு வருகிறார்கள். இது குறித்து தெலுங்கு ரஜினி ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது,
ரஜினி படம் என்பது மற்ற சாதாரண படங்களைப் போல பத்தோடு பதினொன்று அல்ல. ரஜினி படம் வெளியாகிறது என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் எல்லோருமே கொண்டாடுவார்கள். லிங்கா படத்தின் நிகழ்ச்சிக்கு ரஜினி ஐதராபாத் வந்தபோதே சென்னை அளவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். ஆனால், காலா படத்தின் ஆந்திர விநியோகம் இன்னும் கொடுக்கப்படவே இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் ஆந்திராவில் படத்தின் விளம்பர வேலைகளும் தொடங்கவே இல்லை. ஆந்திர மக்களுக்கு காலா படத்தின் பாடல்களோ வெளியீட்டுத் திகதியோ சென்றடையவில்லை. ஜூன் மாதத்தில் வேறு எந்த புதிய படமும் இல்லை. எனவே காலா படத்தை மிகப்பெரிய வெற்றியடைய வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தனுசால் அது கனவாகப் போய்விடுமோ என்று அச்சமாய் இருக்கிறது
என கூறியுள்ளார்.