by Bella Dalima 17-05-2018 | 3:40 PM
Colombo (News 1st)
மேல், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து காலி, பொத்துவிலூடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என திணைக்கம் கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
குறிப்பாக சிலாபம், ஆராச்சிக்கட்டு மற்றும் பல்லம ஆகிய பகுதிகளில் வாழ்வோர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வத்தளை, ஜா- எல, மினுவங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 141.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி மாத்தளையில் பதிவாகியுள்ளது.
தம்புத்தேகமவில் 109.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.