by Bella Dalima 16-05-2018 | 7:51 PM
Colombo (News 1st)
சிநேகப்பூர்வ ரக்பி போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய குழாம் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
சிநேகப்பூர்வ ரக்பி போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகை தந்து, சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெட் தோமஸ் ரீட் என்ற வீரர் நேற்று (15) உயிரிழந்தார்.
முன்னதாக, 26 வயதுடைய ஹாவட் தோமஸ் அன்ரு எனும் வீரர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த வீரர்களின் மரணத்திற்கு அதிக போதைப்பொருள் பாவனையே காரணமென தெரியவந்துள்ளது.
சிநேகப்பூர்வ ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திலிருந்து வருகை தந்த இந்தக் குழாம், 12 ஆம் திகதி போட்டியில் பங்கேற்ற பின்னர் கடந்த சனிக்கிழமை இரவு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளது.
அந்த வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.03 அளவில் விடுதிக்குள் பிரவேசித்த காட்சிகள் குறித்த விடுதியின் CCTVஇல் பதிவாகியுள்ளன.
அவர்கள் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அதிகாலை 1.23 அளவில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அதிகாலை 4 மணியளவிலேயே திரும்பியுள்ளதாக பொலிஸார் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் போதைவஸ்து பயன்படுத்தியதன் காரணமாகவே அந்த வீரர் உயிரிழந்திருப்பதாக நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.