by Staff Writer 16-05-2018 | 9:38 AM
தென்கொரியாவுடன் இன்று இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை வடகொரியா இரத்து செய்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா முன்னெடுக்கவுள்ள இராணுவ பயிற்சிகளை காரணம் காட்டி வடகொரியா இந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கூட்டு இராணுவப்பயிற்சி ஆத்திரமூட்டும் நடவடிக்கையெனவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான ஒத்திகை எனவும் வடகொரிய அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு தொடர்பிலும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்ரம்புடனான சந்திப்பு தொடர்பிலும் வடகொரியா கேள்வியெழுப்பியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அறிவிக்கப்பட்டமைக்கு ஏற்ப இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் Heather Nauert தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பை ஏற்று கடந்த மார்ச் மாதத்தில் ட்ரம்ப் சர்வதேசத்திற்கு அதிர்ச்சியளித்தார்.
அத்துடன் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை உலக சமாதானத்தின் பொருட்டு சிறந்த நிகழ்வாக்குவதாக ட்ரம்ப் அண்மையில் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் வைத்து கிம் ஜொங் உன்னை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.