தீர்வு கிடைக்காவிட்டல் தொடர் வேலைநிறுத்தம்

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டல் தொடர் வேலைநிறுத்தம்: வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

by Bella Dalima 15-05-2018 | 9:15 PM
Colombo (News 1st) தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியைக் கோரி திறைசேரிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்தது. வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாகாண வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் நேற்று 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுக்கேற்ப வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் மத்திய அராங்கத்தின் கீழுள்ள யாழ். போதனா வைத்தியசாலை தவிர்ந்த, வட மாகாண சபையின் நிர்வாகத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் சேவைகள் நேற்று ஸ்தம்பிதமடைந்திருந்தன. வட மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் வழமைபோல் இன்று இயங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். மாகாண வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவர்களின் மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியைக் கோரி பிரதம செயலாளரின் ஊடாக திறைசேரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே கடிதம் அனுப்பியதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திவாகரன் தெரிவித்தார். எனினும், இதுவரை திறைசேரியிடமிருந்து கடிதம் எதுவும் கிடைக்கப்பெறவிலலை எனவும் இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்கள் வேறு நிதி வளங்களினூடாகக் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளதாகவும், வட மாகாணத்திற்கு அவ்வாறு வழங்குமளவிற்கு நிதி மூலம் இல்லை எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.