கிரிக்கெட் நிறுவன நிர்வாகக்காலத்தை நீடிக்க திட்டம்

நிர்வாகக் காலத்தை 12 மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்த்துள்ளது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

by Bella Dalima 15-05-2018 | 7:41 PM
Colombo (News 1st)  எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட பொதுச்சபை கூட்டத்தில் நிர்வாகக் காலத்தை 12 மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுக் கழகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இம்மாதம் 19 ஆம் திகதி நடத்த இதற்கு முன் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேர்தல் குழுவை நியமிக்கும் செயற்பாடு இடம்பெறாத காரணத்தால் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சர், இம்மாதம் 19 ஆம் திகதி விசேட பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்தார். அதற்கமைய, இம்மாதம் 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமது நிர்வாகக் காலத்தை 12 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தயாராகியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பிரகாரமோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தேர்தல் பிற்போடப்பட்டால் தற்போதைய நிர்வாகத்தை 12 மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. என்றாலும், வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மாத்திரமே அவ்வாறு நிர்வாகக் காலத்தை நீடிக்க முடியும் என விளையாட்டுத்துறை சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1973 - 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்திற்கு முரணாக நிர்வாகக் காலத்தை நீடிக்க தற்போதைய நிர்வாகம் முயற்சிப்பது தொடர்ந்தும் பதவியில் நீடிக்கவே அன்றி வேறு எதற்காக? இந்த நாட்டு கிரிக்கெட்டின் பொற்காலத்திற்கு அத்திவாரமாகத் திகழ்ந்த ஆனா புஞ்சிஹேவா போன்றவர்கள் மீண்டும் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.