கடன் பெறுவது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமா?

ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமா?

by Bella Dalima 15-05-2018 | 10:00 PM
Colombo (News 1st)  மத்திய அதிவேக வீதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீனா தயாராகியுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (14) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சீன தூதுவர் பிரதமரை சந்தித்த சந்தர்ப்பத்தில் இந்த நற்செய்தியை கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பேற்ற 2005 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த கடன் 2222 பில்லியன் ரூபாவாகும். ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் 2010 ஆம் ஆண்டு அந்த கடன் தொகை 4590 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அவர் தேர்தலில் தோல்லியடைந்து தற்போதைய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற 2015 ஆம் ஆண்டு நாட்டின் முழு கடன் தொகை 7391 பில்லியனாகக் காணப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு நிறைவின் போது 10,313 பில்லியன் ரூபாவுக்கு அரச கடன் உயர்வடைந்திருந்தது. அரச வருமானம் குறைந்தளவில் காணப்படுவதே கடன் சுமை அதிகரிப்பிற்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வருமானம் கடந்த வருடங்களில் நாட்டின் நாளாந்த செலவுகளுக்கு போதுமானதாகக் காணப்படவில்லை என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. பாரிய திட்டங்களுக்காகவும் இதற்கு முன்னர் பெறப்பட்ட கடன் தவணைகளை செலுத்துவதற்காகவும் நாட்டின் அன்றாட செலவுகளுக்காகவும் மீண்டும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு நாட்டின் அரச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 77.6 வீதமாகக் காணப்பட்டது. அரசுகளுக்கு இடையே நிவாரண அடிப்படையில் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல், நிர்மாணங்களை செயற்படுத்தி கைமாற்றுதல் அல்லது நிர்மாணப்பணிகளை முன்னெடுத்தல் போன்ற உபாய மார்க்கங்களின் ஊடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல், அதிக வட்டி வீத கடனைப் பெற்று வீதிகளை நிர்மாணித்தல் போன்ற செயற்பாடுகள் நாட்டிற்கு சாதகமாக அமையுமா?