லசந்த கொலை: சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

லசந்த கொலை: சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

by Staff Writer 14-05-2018 | 6:50 PM
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பில் தகவலை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபால ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பிரதம நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சந்தேகநபரான பிரதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெதகொட, பிணையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி விடயங்களை சமர்ப்பிக்கவிருந்தார். எனினும் தாம் சுகயீனமுற்றிருப்பதால் இதற்காக வேறொரு தினத்தை பெற்றுத்தருமாறு, சட்டத்தரணி வெதசிங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இரண்டாவது சந்தேகநபரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபால சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ரசிக வீரதுங்க அடுத்த விசாரணையின் போது பிணை கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். இதற்கமைய சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.