by Staff Writer 13-05-2018 | 4:01 PM
COLOMBO (News 1st) ஈரானுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை இன்று சந்தித்தார்.
தெஹரானில் உள்ள அந்நாட்டு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஈரான் அரசினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ஈரான் - இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் சந்தை வாய்ப்புகளை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இலங்கையில் ஈரான் அரசினால் மேற்கொள்ளப்படக்கூடிய முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் ரயில் மார்க்கங்கள் மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பை நிர்மாணித்தல் மற்றும் தற்போது காணப்படும் சுத்திகரிப்பு கட்டமைப்பை விஸ்தரிப்பதற்கு தமது அரசு ஒத்துழைப்பு வழங்கும் என ஈரான் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெஹரான் மற்றும் கொழும்பிற்கு இடையிலான நேரடி விமான சேவையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
போதைப்பொருள் ஒழிப்பு, கலாசாராம், கல்வி, சினிமா மற்றும் சுகாதாரதுறை என்பன குறித்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.