வன்னியின் சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவு

வன்னியின் சமர் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

by Bella Dalima 12-05-2018 | 8:26 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான ''வன்னியின் சமர்'' என வர்ணிக்கப்படும் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. இரண்டாம் நாளில் மீண்டும் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. கே.பிரவிந்தன் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, எஸ்.சதூஷன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 92 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 46 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்படி கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான வன்னியின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஆகிய விருதுகளை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கே.பிரவிந்தன் வென்றார். சிறந்த பந்துவீச்சாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியின் எஸ்.சதூஷன் தெரிவானார்.