அலோசியஸ், கசுனின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Bella Dalima 10-05-2018 | 5:01 PM
Colombo (News 1st)  பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளின் பிரதிகளை பொலிஸ் மா அதிபருக்கு வழங்குமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த நிறுவனத்தால் W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலான அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கடந்த தவணையின்போது நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விடயத்தில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்கள் தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார். இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு ஏற்கனவே சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தலை பிறப்பித்துள்ளதால், அவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.