தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடல்

by Staff Writer 10-05-2018 | 7:37 AM
COLOMBO (News 1st) சட்டத்தின் பிரகாரம் வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பில் அமைச்சின் தலையீடு குறித்து இன்று தௌிவுப்படுத்தப்படவுள்ளது. மின்பிறப்பாக்க திட்டத்திற்கான பத்திரம் அமைச்சரவைக்கு நேற்று சமர்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. உரிய நேரத்தில் மாத்திரம் சேவையாற்றுதல் உரிய பாதுகாப்பு நடவடிக்கை இன்றி சேவையாற்றுவதில் இருந்து விலகுதல் ,திடீர் அழைப்புகளுக்கு ஏற்ப சேவைக்கு வருகை தராமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதனுள் உள்ளடங்குகின்றன. நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டத்தை அமுல்படுத்துவதற்கு மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியை இதுவரையில் பெறாமையால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவுவதற்கு நாம் பல தடவைகள் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. https://www.youtube.com/watch?v=-ktzSbmP2FM