கட்டளைகளை நிறைவேற்றும் 'கூகுள் அசிஸ்டென்ட்'

கட்டளைகளை நிறைவேற்றும் 'கூகுள் அசிஸ்டென்ட்' செயலி அறிமுகம்

by Bella Dalima 10-05-2018 | 4:03 PM
இணையத்தள உலகில் முன்னணி தேடுபொறியாகத் திகழும் கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. ஃபோன் செய்தல், இ-மெயில் தேடுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. இந்த செயலியில் மேலும் சில வசதிகளை கூகுள் நிறுவனம் புகுத்தியுள்ளது. அதாவது, இந்த செயலியைப் பயன்படுத்துவோருக்கு, அவர்கள் சார்பில் செல்ஃபோனில் பேசி பல பணிகளை இந்த செயலி மேற்கொள்ளும். குறிப்பாக விடுதிகளில் உணவுக்கு பதிவு செய்தல், சலூன்களில் முடிவெட்டுவதற்கு நேரம் பெற்றுத்தருதல் (Appointment) போன்ற காரியங்களை இந்த செயலியே ஃபோனில் பேசி முடித்து விடுகிறது. இதற்கான உத்தரவை மட்டும் நாம் பிறப்பித்தால் போதும் . இந்த புதிய வசதிக்கான செயன்முறை விளக்கத்தை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்து காட்டியுள்ளார். அப்போது அவர் பெண்களுக்கான முடிவெட்டும் சலூனில் ஒருவருக்கு நேரம் ஒதுக்குவது குறித்த உத்தரவை பிறப்பித்தார். உடனே இந்த அசிஸ்டென்ட் செயலி சலூனுக்கு பேசி நேரத்தை பெற்றுத்தந்தது. கூகுள் அசிஸ்டென்ட் செயலியின் இந்த புதிய வசதியானது, இந்த ஆண்டு இறுதியில் செயற்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.