சாட்சியை அச்சுறுத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா கொலை: சாட்சியை அச்சுறுத்திய வழக்கின் சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Bella Dalima 09-05-2018 | 8:19 PM
Colombo (News 1st)  புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எல். றியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் சார்பில் ஆஜராகியுள்ள இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவினால் மேற்கொள்ள வேண்டிய மேன்முறையீட்டில் நிலவும் தாமதம் காரணமாக விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிணை மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் நீதவான் இன்று ஆணைக்குழுவிடம் வினவியுள்ளார். பிணை மனு சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்தேகநபர் வித்தியா கொலை வழக்கில் குற்றவாளியா என்பது குறித்து ஆராய்வதாக ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார். எனினும், வித்தியா படுகொலை வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பில் பிறிதொரு வழக்கே சந்தேகநபர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். எனவே, பிணை கோருவது தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார். எனினும், வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையின் படி கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.