ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 09-05-2018 | 12:16 PM
COLOMBO (News 1st) ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் , ரயில் சாரதிகள் மற்றும் ரயில் பாகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர். அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஆகியோரது வாக்குறுதி காரணமாக பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக்க பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் அமைச்சரவை கூட்டத்தின்போது தமது கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவோ அல்லது தீர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவோ இன்று நண்பகல் வரை பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று நண்பகல் முதல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு ரயில் நிலையத்தில் இருந்தும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ரயில்களை உரிய ரயில் நிலையங்கள் வரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.