அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வௌியேறியது

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வௌியேறியது

by Staff Writer 09-05-2018 | 7:40 AM
ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வௌியேறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தம் சிதைவடைந்த மற்றும் அழிந்துகொண்டிருக்கும் ஒன்றென விமர்சித்துள்ள ட்ரம்ப் அமெரிக்க பிரஜையென்ற அடிப்படையில் தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றென குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு மாற்றீடாக அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவது தொடர்பான மேற்குலக நாடுகளுடனான ஒப்பந்த்தில் ஈரான் கடந்த 2015 இல் கைச்சாத்திட்டது. இந்நிலையில் குறித்த பொருளாதார தடைகள் மீள விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் யுரேனியம் செறியூட்டல் நடவடிக்கைகளை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிப்பதில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரஹானி தெரிவித்துள்ளார். 2015 இல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டன. மே மாதம் 12 ஆம் திகதி குறித்த அணுசக்தி ஒப்பந்தம் மீள புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் முன்னெப்போதும் இல்லாத அளவு அமெரிக்கா வருத்தப்பட நேரிடுமென ஹசன் ரஹானி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரான் உலக நாடுகளுக்கு பொய்யுரைத்து அணுசக்தி நடவடிக்கைகளை இரகசியமாக முன்னெடுத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.