வடக்கில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் அதிகரிப்பு

வட மாகாணத்தின் பல பகுதிகளில் வாள்வெட்டுத் தாக்குதல்கள்

by Bella Dalima 08-05-2018 | 7:55 PM
Colombo (News 1st)  யாழ். குடா நாடு உள்ளிட்ட வட மாகாணத்தின் பல பகுதிகளில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு, விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் குறைவடையவில்லை. அண்மைக்காலமாக யாழில் அதிக வாள்வெட்டுத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோயில் முன்றலில் நேற்றிரவு 7 மணியளவில் இளைஞர்கள் சிலர் கூடியிருந்த வேளையில், மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது இருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. சம்பவத்தில் நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர். தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த வாள்வெட்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து பதில் வழங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்