நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ: ஒருவர் கைது

பண்டாரவளை நீதிமன்ற பதிவாளர் காப்பகத்திற்கு தீ மூட்டல்: மஹரகமயில் ஒருவர் கைது

by Bella Dalima 08-05-2018 | 3:21 PM
Colombo (News 1st) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் காப்பகத்திற்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மஹரகமயில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பதிவாளர் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வழக்கு விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் தீக்கிரையாகின. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, கடந்த 6 ஆம் திகதி சந்தேகநபர் மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் மாத்திரம் 11 வழக்குகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார். கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே 11 வழக்குகளும் காணப்படுகின்றன. இதில் ஒரு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், மேல்முறையீடு செய்ததை அடுத்து குறித்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். சில வழக்குகளில் விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையிலேயே இந்த தீ மூட்டல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.