Colombo (News 1st)
2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணம் தொடர்ந்தும் பின்னிலையில் உள்ளது.
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதிகளவிலானோர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ள போதிலும், ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வட மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது.
2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தென் மாகாணமே முன்னிலையிலுள்ளது.
அங்கு 79.41 வீதமானவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாவதாகவுள்ள வட மத்திய மாகாணத்தில் 74.60 வீதமானவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 74.58 வீதமானவர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 74.33 வீதமானவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, மத்திய மாகாணம் 5ஆம் இடத்திலும் வட மத்திய மாகாணம் 6 ஆம் இடத்திலும் உள்ளன.
ஊவா மாகாணத்தில் 69.71 பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதுடன், 2016 இல் ஆறாம் இடத்தில் இருந்து, 2017 இல் ஏழாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் பின்னிலையிலேயே உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 67.76 வீதமானோர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2016 ஆம் ஆண்டை விட உயர் தரத்திற்கு தெரிவானவர்களின் வீதத்தில் 6.2 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வட மாகாணம் இறுதி இடத்திலுள்ளதுடன், 66.12 வீதமானோர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
எனினும், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர் தரத்திற்கு தெரிவானவர்களின் வீதத்தில் 5.46 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, அனைத்து பாடங்களிலும் சித்தியடையாதவர்களின் பட்டியலிலும் வட மாகாணமே முன்னிலையிலுள்ளது.
3.46 வீதமானவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையாதுள்ளனர்.
கடந்த காலப்பகுதியில் கல்வியில் வட மாகாணமே முன்னணியில் இருந்தது.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கான காரணம் என்ன?
இதுபற்றி வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்ததாவது,
வடக்கு, கிழக்கில் தொழில் வளம் இல்லை. இங்கு விவசாயிகளாக, மீன்பிடி மக்களாக இருந்தாலும் அடுத்து இருப்பது ஒரே ஒரு அரசாங்க உத்தியோகம். ஆகவே பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்தார்கள். நிறைய செலவழித்தார்கள். ஆகவே எங்கள் முயற்சியினால் தான் நாங்கள் முன்னேறினோமே தவிர யாரும் எங்களை தட்டில் வைத்து ஏந்தவில்லை. ஆனால், யுத்தம் வந்த பின்னால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. எங்கள் கல்வி பல வழிகளில் சீரழிக்கப்பட்டது. நாங்கள் பின்தங்கியவர்களாகிப் போய் எங்களுக்கு பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு எங்களுக்கு தகுதி வாய்ந்த அதிபர்கள் போதவில்லை. தகுதிவாய்ந்த விஞ்ஞான, கணித, ஆங்கில ஆசிரியர்கள் இல்லை.