அரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்?

அரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்?

by Bella Dalima 04-05-2018 | 9:07 PM
Colombo (News 1st)  அரிசி இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் நிலவிய சீரற்ற வானிலையினால் 2017 ஆம் ஆண்டிற்கான நெல் உற்பத்தி பாரியளவில் பாதிப்படைந்தது. அதன் பிரகாரம், ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் கடந்த வருடம் குறைந்த நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இது உள்நாட்டு நுகர்வுக்கு போதுமானதாக இருக்காமையினால் இந்தியா, பாகிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்தது. அதன் பிரகாரம், அரிசி இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைப்பதற்கு அடிக்கடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய வங்கியின் அறிக்கைகளுக்கு அமைய, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் 8 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த போகத்தின் போது அதிகளவு நெல் அறுவடை செய்யப்பட்டமையால் தொடர்ந்தும் அரிசி இறக்குமதி செய்வதற்கான தேவை நாட்டில் இல்லை என மே மாதம் முதலாம் திகதி கூடிய வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்தது. இதனையடுத்து, விதிக்கப்பட்டிருந்த வரி மாற்றியமைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரசிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்ய 70 ரூபாவை விட அதிக நிதி செலவாகும் என வாழ்க்கைச் செலவு குழு குறிப்பிட்டது.