கந்தப்பளையில் 3 சிறுமிகள் துஷ்பிரயோகம்

கந்தப்பளையில் 3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: தந்தை உள்ளிட்ட நால்வர் கைது

by Bella Dalima 03-05-2018 | 9:17 PM
Colombo (News 1st)  நுவரெலியா - கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிறுமிகளின் தந்தை, சிறிய தந்தை, மேலும் இருவர் அடங்குவதாக பொலிஸார் கூறினர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சிறுமிகளின் தாயும் தொடர்புபட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு தப்பிச்சென்றுள்ளனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கருகில் நிர்க்கதிக்குள்ளான சிறுமிகளை பொலிஸார் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சிறுமிகளின் தந்தை உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.