by Bella Dalima 28-04-2018 | 8:04 PM
Colombo (News 1st)
கம்பஹா ஶ்ரீபோதி வீதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது 46 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிக்கக்கூடிய சில பொருட்கள் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை அங்கு பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒஸ்மன் குணசேகர என்பவருக்கு சொந்தமான குறித்த வீட்டிலிருந்து 9 மில்லிமீட்டர் அளவிலான 46 துப்பாக்கி ரவைகளும், அவை தொடர்பில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையை அடுத்து, ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சுகயீனமுற்றிருப்பதால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஒஸ்மன் குணசேகர என்பவர் வௌிநாடு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.