ஆணாக சித்தரித்து பெண்ணை திருமணம் செய்த பெண் கைது

ஆணாக சித்தரித்து பெண்ணை திருமணம் செய்துகொண்ட பெண் கைது: மூதூரில் சம்பவம்

by Bella Dalima 28-04-2018 | 7:36 PM
Colombo (News 1st)  திருமணத்தை அடிப்படையாக வைத்து பெண் ஒருவரால் மற்றொரு பெண் ஏமாற்றப்பட்ட சம்பவம் திருகோணமலை, மூதூர் பகுதியில் பதிவாகியுள்ளது. வௌிமாவட்ட பெண் ஒருவரால் மூதூர் ஶ்ரீ நாராயணபுரம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். தன்னை ஒரு ஆணாக சித்தரித்த பெண், மூதூரிலுள்ள இளம் பெண்ணொருவரை கடந்த 25 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மணப்பெண் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் அவரிடம் சோதனை செய்த போது, அவர் பெண் என்பதும் ஆணாக சித்தரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தனது சகோதரனின் சாயலை ஒத்துள்ள குறித்த பெண் அவரின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணையும் லொறி சாரதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்களைக் கடத்தும் செயற்பாடுகளுக்காக இந்த மோசடியை நடத்தியிருக்கக்கூடும் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.  

ஏனைய செய்திகள்