Colombo (News 1st)
ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பு தொடர்பில் சுஜீவ சேனசிங்க அதிருப்தி வௌியிட்டார்.
அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது சுஜீவ சேனசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
பிரதமருடன் நான் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன். தௌிவான மாற்றமொன்றிற்கு அவர் வாக்குறுதியளித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையினால் நாம் வீழ்ச்சியடைவோம் என அவருக்கு கூறினேன். அதனால் தனி நபர் ஒருவரை பாதுகாப்பதா, சிலரை பாதுகாப்பதா, சலுகைகளை தனி நபர் ஒருவருக்கு வழங்குவதா என ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். இது இறுதி சந்தர்ப்பமாகும். இந்த சந்தர்ப்பத்தில் பொய்களைக் கூறி, தலைகளை மாற்றி இதனை முன்னெடுக்க முயற்சித்தால் அது பாரிய அழிவாகும். தற்போது கட்சி பாரியளவில் அழிவடைந்துள்ளது. நாம் களைத்துப்போயுள்ளோம். தலைவருடன் வௌி இடங்களில் நான் பேசுவதில்லை. உள்ளகக் கலந்துரையாடலிலேயே ஈடுபடுவேன். 7 வருடங்களாகக் கலந்துரையாடி நாம் களைத்துப்போயுள்ளோம். எதிராக பேசுவதன் ஊடாக கட்சிக்குள் இருக்க முடியாத சூழல் எமக்கு ஏற்படும். அரசியலில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாம் கட்சி மாறப்போவதில்லை. கொள்கை ரீதியில் நான் அரசியலில் ஈடுபடுவேன்.