S.B. திசாநாயக்கவிற்கும் மகனுக்கும் பிணை

ஐ.தே.க வேட்பாளர் மீது தாக்குதல்: எஸ்.பி. திசாநாயக்கவிற்கும் அவரது மகனுக்கும் பிணை

by Bella Dalima 26-04-2018 | 3:56 PM
Colombo (News 1st)  கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கண்டி கலஹா பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் அவருடைய மகன் கீர்த்தி பண்டார திசாநாயக்க ஆகியோருக்கு கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான சம்பவத்தை மத்தியஸ்தர் சபைக்கு கையளிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த ​கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானித்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.