M.S. ராஜேஸ்வரி மறைவு: அஞ்சலி செலுத்தாத திரைத்துறை

எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தாத திரைத்துறையினர்

by Bella Dalima 26-04-2018 | 6:23 PM
‘நாம் இருவர்’ படத்தில் `காந்தி மகான்' என்ற பாடலை பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று (25) காலமானார். 87 வயதாகும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் பாடிய சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), மியாவ், மியாவ் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள் தானே (செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் (திக்குத் தெரியாத காட்டில்) உள்ளிட்ட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில்,
களத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும் தான். அதை பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்று இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆனால், மற்ற திரையுலகத்தினர் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மகன் ராஜ் வெங்கடேஷ்,
என் அம்மா 75 வருடமாக சினிமாத்துறையில் இருந்தார். நடிகர் சங்கம், டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். என் அம்மா இறந்து இதுவரை சினிமாவில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது. யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று காத்திருக்கிறோம்.
என கூறியுள்ளார்.