தெற்காசியமெய்வல்லுநர் போட்டிகளில் வடமாகாண வீரர்கள்

இளையோருக்கான தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாண வீரர்கள் போட்டியிட வாய்ப்பு 

by Bella Dalima 26-04-2018 | 10:31 PM
Colombo (News 1st)  இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இளையோருக்கான தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாண வீரர்கள் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று நிறைவுக்கு வந்த இளையோருக்கான தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வெளிப்படுத்திய ஆற்றல்கள் மூலம் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் எஸ். கிந்துஜன், யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் எஸ்.பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதற்கு தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான 5000 மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தின் எஸ். கிந்துஜன் கைப்பற்றினார். 5000 மீற்றரை 15 நிமிடங்கள், 56 செக்கன்ட்களில் கடந்த அவர் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள் 56 செக்கன்ட்களில் பூர்த்தி செய்தார். இதேவேளை, இன்று நடைபெற்ற இளையோருக்கான தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான சம்மட்டி எறிதலில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி வீரர்கள் சுவீகரித்தனர். எஸ்.பிரகாஷ்ராஜ் 39.73 மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை வெற்றிகொண்டார். வி.யதார்த்தன் 34.10 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், டி. அபிஷான் 31.50 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.