ரயிலுடன் பாடசாலை பஸ் மோதல்: 13 சிறுவர்கள் பலி

இந்தியாவில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி

by Bella Dalima 26-04-2018 | 4:35 PM
இந்தியாவில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் பகுதியில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை பஸ், ரயில் கடவையைக் கடக்க முயன்ற போது வேகமாக வந்த ரயிலுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் 10 வயதிற்குட்பட்ட 25 மாணவர்கள் பயணித்துள்ளனர். குஷிநகரின் கோரக்பூரை அண்மித்த 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 9 ஆம் திகதியன்று பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 27 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.