அரசியல்குழு பெயரிட்டவர்களுக்கு பதவிகளைவழங்க அனுமதி

அரசியல் குழு பெயரிட்டவர்களுக்கு பதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி

by Bella Dalima 26-04-2018 | 7:42 PM
Colombo (News 1st)  பூரண அதிகாரம் கொண்ட அரசியல் குழு நேற்றுக் கூடி பெயரிட்டவர்களுக்கு பதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தை ஆட்சேபித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா செயற்குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழு இன்று முற்பகல் கூடியது. இதன்போது தலைமைத்துவத்தைத் தவிர்ந்த புதிய பதவிகளுக்காக பெயரிடப்பட்டவர்களுக்கான அங்கீகாரம் பெறப்பட்டது. ஒரு சில தீர்மானங்கள் தொடர்பில் கூட்டத்தில் விமர்சனங்களை முன்வைத்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன்னரே சிறிகொத்தவில் இருந்து வௌியேறினார். இதன்போது, ஊடகவியலாளர்களுக்கு ஜோசப் மைக்கல் பெரேரா பின்வருமாறு கருத்துக் கூறினார்.
பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவை தலைவர் பிரேரித்தார். உப தலைவராக ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கு ஆட்சேபனை உள்ளதா என கேட்டனர். நான் அதனை எதிர்ப்பதாகக் கூறினேன். பிரதித் தலைவர் விடயத்தில் பிரச்சினை இல்லை. உப தலைவராக ரவியை நியமிப்பதற்கு நான் எதிர்ப்பைத் தெரிவித்தேன். இங்கு கருத்து வௌியிடுவது சரியில்லை என்றார்கள். அப்படியாயின், வௌியில் கருத்து வௌியிட சந்தர்ப்பம் உள்ளதா என கேட்டேன். செயற்குழு உறுப்பினராக அதற்கு இடம் இல்லை என்றார்கள். ஆகவே நான் செயற்குழுவில் இருந்து விலகினேன்.
இதேவேளை, கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் அங்கிருந்து வௌியேறிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரே‌ஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட மறுத்தனர்.