பதக்கங்களை சுவீகரித்த வட மாகாண வீர, வீராங்கனைகள்

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: பதக்கங்களை சுவீகரித்த வட மாகாண வீர, வீராங்கனைகள்

by Bella Dalima 24-04-2018 | 9:39 PM
Colombo (News 1st) சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றும் வட மாகாண வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்தனர். 18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் அருணோதயா கல்லூரியின் சுகுமார் திஷாந்த் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 3.90 மீற்றர் தூரத்திற்கு பாய்ந்து தனது திறமையை வெளிப்படுத்தினார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அருந்தவராசா பவிதரன் 3.80 மீற்றர் தூரத்திற்கு பாய்ந்து திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். அதே கல்லூரியைச் சேர்ந்த நிரஞ்சன் பானுஜன் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.7 மீற்றர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்திய யாழ். ஹாட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இதேவேளை 20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ் வெள்ளிப்பதக்கத்தை வெற்றி கொண்டார். போட்டியில் அவர் 42.50 மீற்றர் தூரத்திற்கு எறிந்து ஆற்றலை வெளிப்படுத்தினார்.