by Bella Dalima 24-04-2018 | 4:13 PM
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் பிரகாரம், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி 2015 அம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
எனினும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவு அடிப்படையில் நளினியின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளதால், தமிழக அரசு தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கோரி நளினி மேல்முறையீடு செய்துள்ளார்.