சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டணை

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: இந்திய அமைச்சரவை ஒப்புதல்

by Bella Dalima 21-04-2018 | 5:50 PM
12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டமை, அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் மரணமடைந்தமை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பன மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை உடனடியாகக் கூட்டினார். அதன்படி, மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதன்போது சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கான தண்டனையை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் நடைமுறைக்கு வரும்.