இலங்கையின் கோரிக்கை குறித்து IMF கவனம்

விலைச்சுட்டெண் தொடர்பான இலங்கையின் கோரிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம்

by Bella Dalima 21-04-2018 | 9:00 PM
Colombo (News 1st) எரிபொருளுக்கான விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்துவதற்கு 2018 ஜூன் மாதம் வரை கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நிறைவேற்றுக்குழு கவனம் செலுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சீர்திருத்தத்தை பூரணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முதலாவது நடவடிக்கையே இதுவென சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் விரிவான கடன் வசதி தொடர்பான நான்காவது மீளாய்வு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுயமாக எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் பொறிமுறைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைப்பதற்கு, ஜூன் மாதம் நான்காவது மீளாய்வை நிறைவு செய்ய இலங்கை விடுத்த கோரிக்கையை நிறைவேற்று சபை கவனம் செலுத்தும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் பிரதானி மெனுஎலா கொரத்தி (Manuela Goretti) தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கான விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்துவதற்கு இந்த வருடம் மார்ச் மாதம் வரை சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. எனினும், இந்த விடயம் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன அண்மையில் கூறியிருந்தார். வொஷிங்டன் நகரில் தற்போது நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டத்தொடரில் இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்டுள்ளார். இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்ற நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் விரிவான கடன் வசதி தொடர்பான நான்காவது மீளாய்வு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எரிபொருள் விலைச்சுட்டெண்ணுக்கு மேலதிகமாக அரச வர்த்தக நிர்வாக செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும், அதன் ஊடாக அரச நிதியின் மீதுள்ள ஆபத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.