கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரஷ்ய கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரஷ்ய கடற்படையின் யுத்த பயிற்சிக் கப்பல்

by Bella Dalima 20-04-2018 | 9:53 PM
Colombo (News 1st) ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான யுத்த பயிற்சிக் கப்பலான பெரிகொப் கப்பல் நற்பெயரை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ரஷ்யக் கடற்படையின் போல்டிக் படையணிக்கு சொந்தமான இந்தக் கப்பல் 1977 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ரஷ்யாவின் கடற்படை வீரர்கள் கடலில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல் 138 மீட்டர் நீளம் கொண்டதுடன் 17 மீட்டர் அகலம் கொண்டது. 6900 மெட்ரிக் தொன் எடை கொண்ட இந்த யுத்த பயிற்சிக் கப்பலில் 403 பேர் பயணிக்க முடியும். நவீன ரேடார் கட்டமைப்பு, நவீன திசை காட்டிகள், தற்பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆழமான கடலை கண்காணிக்கும் அதி நவீன வசதிகளையும் பெரிகொப் கப்பல் கொண்டுள்ளது. இந்த பெரிய கப்பலுக்கு 16,000 வலுகொண்ட இரண்டு டீசல் என்ஜின்கள் மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. பெரிகொப் கப்பல் 76 மில்லிமீட்டர் ரக நான்கு பீரங்கிகளையும் விமானங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முடியுமான 30 மில்லிமீட்டர் ரக இரண்டு பீரங்கிகளையும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதக் கட்டமைப்பையும் கொண்டது. 220 கடெட் அதிகாரிக்கு மேலதிமாக 20 ஆலோசகர்களும் கப்பலின் பணியாளர்கள் 120 பேரும் இந்தக் கப்பலில் இலங்கை வந்துள்ளனர்.