பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல: சிவசக்தி ஆனந்தன்

பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல: சிவசக்தி ஆனந்தன்

by Bella Dalima 19-04-2018 | 8:00 PM
Colombo (News 1st)  புதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புதிய அனுபவங்களை வழங்கியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவிக்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களை சிலர் சுயநலன்களுக்காக தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவாக நாடு இன்று பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பேதங்களை மறந்து, ஒன்றிணைந்து கிராமங்கள், நகரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசியப் பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகையில், அந்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு தயாராகவே உள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காக பல கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அவைகளை மீட்டிப்பார்த்து பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.