தலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் நபர்

தலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம்

by Bella Dalima 19-04-2018 | 6:35 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தலை முடியில் வாகனத்தைக் கட்டி, இழுத்துச்செல்லும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றார். அவரின் முயற்சியால் அண்மையில் வேன் ஒன்றை தலை முடியில் கட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச்சென்றுள்ளார். யாழ்ப்பாணம் - வயாவிளான் பகுதியில் வசிக்கும் 54 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரே பல வருடங்களாக வாகனத்தை தலை முடியில் கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், சித்திரைப் புத்தாண்டு தினத்தில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வேனொன்றை தனது தலை முடியில் கட்டி இழுத்துள்ளார். வாகனமொன்றை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை முதல் முறையாக அன்றைய தினம் இழுத்ததாக செல்லையா திருச்செல்வம் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது,
முன்னர் இவற்றை செய்ய எனக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. வௌிநாடு சென்று முயன்று பார்த்தேன். விசா பிரச்சினை இருந்ததால் இதனை செய்ய முடியாமற்போனது. இலங்கைக்கு வந்து இரண்டு வருடத்திற்குள் ட்ரக்டர் இழுத்திருக்கிறேன். டிப்பரும் இழுத்திருக்கிறேன். இப்போது ஒரு கிலோமீட்டர் அளவிற்கு இழுக்கின்ற பலம் இருக்கிறது. உடம்பில் சக்தி என்று கிடையாது. மனதில் இழுக்க வேண்டும் என்று எண்ணுவதால் இழுத்தேன். கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா.