இறப்பர் தொழிற்சாலையில் ஐவர் பலி: முகாமையாளர் கைது

ஹொரனை இறப்பர் தொழிற்சாலை விபத்தில் ஐவர் பலி: முகாமையாளர் கைது

by Bella Dalima 19-04-2018 | 8:49 PM
Colombo (News 1st)  ஹொரனை - பெல்லபிட்டிய பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். கவனயீனமாக செயற்பட்டமையால் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இறப்பர் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒருவர் அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கிக்குள் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு சென்ற நால்வர் அமோனியா வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அனர்த்தத்தின் போது மயக்கமுற்ற 15 பேர் ​ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் தமர களுபோவில குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மயக்கமுற்றவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.