இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 18-04-2018 | 9:40 PM
Colombo (News 1st)  நாட்டின் சில மாவட்டங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது. இதேவேளை, மன்னார் தொடக்கம் கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடற்பிராந்தியங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வரையான காற்று வீசக்கூடும் என்பதால் கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அதிகாரி குறிப்பிட்டார். இதேவேளை, இடி மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தங்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிதம்பரம்பிள்ளை அமலநாதன் குறிப்பிட்டார்.