கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே

மக்களின் கோரிக்கையாலேயே வடக்கிற்கு மீண்டும் நியமிக்கப்பட்டதாக ரெஜினோல்ட் குரே தெரிவிப்பு

by Bella Dalima 17-04-2018 | 7:25 PM
Colombo (News 1st)  வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே தனது கடமைகளை இன்று மீண்டும் பொறுப்பேற்றார். மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அதற்கு அடுத்த நாள் வட மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே, தனது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது, ஜனாதிபதிக்கும் முதலமைச்சருக்கும் தம்மை வடக்கிற்கு திருப்பியனுப்புமாறு மக்கள் கடிதம் எழுதி அனுப்பியதாலேயே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். மேலும், வடக்கு மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை தம்மால் இயன்றவரை செய்வதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மதஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.