பூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் விண்கலம்

பூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம்

by Staff Writer 17-04-2018 | 11:49 AM
பூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் நேற்று (16)புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘washing machine’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2,200 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ரொக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து சென்றது. விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 இலட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20,000 புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும். அதில் பூமி அளவில் 50 புதிய கிரகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.