நடிகர் வடிவேலு நடிக்கத் தடை?

நடிகர் வடிவேலு நடிக்கத் தடை?

by Bella Dalima 17-04-2018 | 4:13 PM
நடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால், அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்சை அரசன் படத்தில் நடித்துக்கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும், வடிவேல் அதை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு திகதி ஒதுக்கி நடித்து வருவதால், இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வது குறித்து சட்டத்தரணிகளுடன் வடிவேல் ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.