ஜனாதிபதி லண்டன் சென்றடைந்தார்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி லண்டன் சென்றடைந்தார்

by Staff Writer 16-04-2018 | 3:11 PM
COLOMBO (News 1st) பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாடு இன்று லண்டனில் ஆரம்பமாகவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று லண்டனுக்கு பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால, இன்று அதிகாலை அங்கு சென்றடைந்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாடு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் இம்முறை அமர்வு இடம்பெறவுள்ளது. சுகாதாரம்,பாதுகாப்பு,நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்களை இலக்காக கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது கடந்த முறை பொதுநலவாய மாநாடு மோல்டாவில் நடைபெற்றது. இதன் பிரகாரம் தலைமைப்பதவி மோல்டாவுக்கு வழங்கப்பட்டது. இம்முறை தலைமைப்பதவி ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கப்படவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச தலைவர்கள் பலரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். பொதுநலவாய மாநாட்டிற்கு நிகராக இடம்பெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதன் போது நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=5W3hrFZRzUU